ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..
By: Monisha Wed, 06 July 2022 9:32:43 PM
டெல்லி: தனியார் துறையைச் சேர்ந்த ஸ்பபைஸ் ஜெட் விமான நிறுவனம் விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2018 - 19, 2019 - 20 மற்றும் 2020 - 21 ஆம் ஆண்டுகளில், முறையே 316 கோடி ரூபாய்; 934 கோடி ரூபாய் மற்றும் 998 கோடி ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.இதற்கிடையே, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் விமானங்கள், அண்மைக்காலமாக தொழில்நுட்பக் கோளாறில் சிக்கி தவித்து வருகின்றன.
கடந்த 18 நாட்களில் மட்டும், 8 முறை அந்த நிறுவனத்தின் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டு உள்ளன. இதில் ஜூலை 5 ஆம் தேதியான நேற்று மட்டும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள், தொழில்நுட்பக் கோளாறில் சிக்கின.
இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
மேலும், விமான பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது என விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.