- வீடு›
- செய்திகள்›
- இந்தியாவில் தீவிரமாகும் குரங்கு அம்மை நோய்..கட்டுப்படுத்த ஆலோசனை..மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் தீவிரமாகும் குரங்கு அம்மை நோய்..கட்டுப்படுத்த ஆலோசனை..மத்திய சுகாதாரத்துறை தகவல்
By: vaithegi Mon, 25 July 2022 6:04:01 PM
இந்தியா: கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மை தற்போது இந்தியாவிலும் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், முதலில் கேரளாவில் நுழைந்த குரங்கு அம்மை இப்போது தலைநகர் டில்லியையும் எட்டிவிட்டது. மேலும், குரங்கு அம்மை நோய் என்பது ஒரு வகையான அம்மை நோய் ஆகும். இது வைரஸ் தொற்றினால் பரவுகிறது. மேலும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவை இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த அறிகுறிகள் தோன்றி 5 நாட்களுக்குள் உடலில் சிவப்பு நிற புள்ளிகள், கொப்புளங்கள் தோன்றும்.
மேலும் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டவர்களில் 10ல் ஒருவர் இறக்க நேரிடும் என்றும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நோயினால் 75 நாடுகளில் மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வருபவர்களை விமான நிலையம், துறைமுகங்களில் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தொற்று பரவலை சர்வதேச பொது சுகாதார உலக அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இதனால், நாடு முழுவதும் இந்நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக புதுடில்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உலக அளவிலும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் மிதமாக இருந்தாலும், அவை வேகம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. இந்த வைரஸ் குறித்து அறியப்படாத தகவல்கள் நிறைய உள்ளன. எனவே நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் கூறியுள்ளார்.