தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Wed, 02 Sept 2020 4:29:06 PM
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதாவது திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.