9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு
By: Nagaraj Tue, 01 Sept 2020 6:15:04 PM
மிக கனமழை பெய்யக்கூடும்... தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுவை, காரைக்கால் உள்பட பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். செப்டம்பர் மாதம் 2, 3-ஆம் தேதிகளில்
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும்
புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய
லேசானது முதல் மிதமான மழையும்,
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை
பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி
நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில
பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.