கேரளாவில் வருகிற 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Mon, 08 Aug 2022 3:07:49 PM
கேரளா: இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கி பல மாநிலங்களில் பரவலாக பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக கேரளாவில் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மழை பொழிவை விட 103 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவை தொடர்ந்து மும்பை மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் கனமழை பெய்து பல பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவின் தெற்கு கடற்கரையிலிருந்து கேரளாவின் வடக்கு கடற்கரை வரை நீண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கிழக்கு மத்திய அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கேரளாவில் வருகிற 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர்,காசர்கோடு, ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆலப்புழா, வயநாடு, பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் போன்ற இடங்களில் தற்காலிக முகாம்களாக பள்ளிகள் செயல்படுகின்றன.