ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
By: Monisha Thu, 23 July 2020 3:01:02 PM
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மாலத்தீவு, கேரளா, லட்சத்தீவு கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.