கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
By: Monisha Mon, 16 Nov 2020 2:47:40 PM
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. தீபாவளி பண்டிகை தினத்தில் கனமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. ஆனால் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை சென்னை மண்டல துணை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல் மேற்கு தாம்பரம் 69 மி.மீ., செம்பரம்பாக்கம் 60 மி.மீ., புதுச்சேரி 54 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.