தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு
By: Monisha Tue, 10 Nov 2020 3:21:42 PM
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த மாதம் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், மாவட்ட வாரியாக வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகப் பதிவாகி உள்ளது, குறிப்பாகச் சென்னையில் 15 சதவிகிதம் குறைந்து பதிவாகி உள்ளது.
இந்நிலையில் மீண்டும் வருகிற 11-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை முதல் நாகை வரையிலான கடலோர பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்யும். மேலும், நவம்பர் மாத பிற்பகுதியில், கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.
தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் தென்காசி, ஒட்டப்பிடாரம், வீரகனூர் மற்றும் செங்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் 4 செ.மீ அளவு மழைப் பதிவாகி உள்ளது.