புரெவி புயல் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Mon, 07 Dec 2020 09:00:44 AM
புரெவி புயல் காரணமாக 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகிய புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலை கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பல இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.