4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Tue, 17 Nov 2020 08:25:47 AM
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்" என்று கூறியுள்ளார்.