6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Mon, 09 Nov 2020 4:05:27 PM
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது. சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, "தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 72 மணி நேரத்தில் கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.