தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Sat, 24 Oct 2020 1:44:22 PM
தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 28ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணி, நாற்றாம்பள்ளியில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், பெனுகொண்டாபுரத்தில் 4 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.