தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Thu, 15 Sept 2022 2:21:19 PM
சென்னை: தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் 17-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 18, 19-ந்தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதேசமயம் மீனவர்களுக்கான எந்தவிதமான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி, ஊட்டியில் தலா 5 செ.மீ. மழை அதிகபட்சமாக பெய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.