தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
By: Monisha Mon, 17 Aug 2020 4:00:49 PM
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. பந்தலூர், அவலாஞ்சியில் தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, இன்றும் நாளையும் வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.