வளிமண்டல சுழற்சியால் மழை பெய்யும் வாய்ப்பு
By: Nagaraj Tue, 03 Nov 2020 5:08:32 PM
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28ஆம் தேதி தொடங்கி அன்றைய தினம் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால் அதன் பின்னர் மழையை காணவில்லை. கடந்த சில தினங்களாக வெயில் அதிகரித்து வருகிறது. எனினும் ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு
மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை
மற்றும் நாளை மறுநாள் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி ஆகிய
ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர்
மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.