மராட்டியத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
By: Monisha Wed, 12 Aug 2020 5:29:57 PM
மும்பை, புனேயில் வருகிற 15-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மும்பையை பொறுத்தவரை மிதமான மழையே எதிர்பார்க்கப்படுவதாகவும், தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "வரும் 15-ந்தேதி வரை புனே, கோலாப்பூர், சத்தாரா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மராட்டியம், மரத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும்" என்றார்.
கடலோர மாவட்டங்களை போல மலையோர பகுதிகளில் மேக கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்துக்கு அந்த பகுதிகள் மற்றும் மத்திய மராட்டிய பகுதியில் மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கோசாலிகர் கூறினார்.