அடுத்த 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
By: Monisha Sun, 15 Nov 2020 1:45:31 PM
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.