தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
By: Monisha Wed, 04 Nov 2020 10:21:56 AM
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
அதிலும், 4-ந்தேதி மதுரை, கோவை, சிவகங்கை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 5-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.