இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
By: Monisha Sat, 29 Aug 2020 09:26:27 AM
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 29-ந்தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30-ந்தேதி (நாளை), 31-ந்தேதி (நாளை மறுநாள்) மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதிகளில் வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், குடிதாங்கி 9 செ.மீ., மாமல்லபுரம்8 செ.மீ., கடலூர் கலெக்டர் அலுவலகம் 7 செ.மீ., இளையான்குடி, திருக்கழுக்குன்றம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.