பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம்
By: Monisha Fri, 25 Sept 2020 10:33:05 AM
இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேர ஜூலை மாதம் 15-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடங்கி, கடந்த மாதம் 16-ந்தேதி முடிவடைந்தது. மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர்.
விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களில், 17 ஆயிரத்து 230 பேர் விருப்பம் காட்டாதது இதன் மூலம் தெரியவந்து இருக்கிறது.
இதனையடுத்து விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இன்றைக்கு பதில் வரும் 28ந்தேதி வெளியிடப்படுகிறது.
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தள்ளிப்போகிறது. www.tneaonline.org-ல் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறியலாம்.
செப்டம்பர் 17, 25, 28 என மூன்றாவது முறையாக தரவரிசைப்பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.