UPI பணபரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டணமா?
By: vaithegi Thu, 30 Mar 2023 12:11:45 PM
இந்தியா: நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தியது முதல் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. எனவே அதற்கென பிரத்தேக செயலிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போன்பே, ஜிபே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் மூலம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செய்யப்படும் பணபரிமாற்றங்களுக்கு கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியானது.
இதனை அடுத்து இது குறித்து தேசிய கட்டண கழகம் ( என்பிசிஐ) விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன் படி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ. பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.ஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியைக் கொண்டு, ரூ.2000-க்கு மேல் வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றங்களுக்கு மட்டும் தான் ஏப்ரல் 1 -ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும் என தெளிவுபடுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியான விளக்கத்தில் ஒரு நிறுவனத்தின் வாலட் வைத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றொரு நிறுவனத்தின் வாலட் வைத்திருப்பவருக்கு பணம் செலுத்தும் பொது ஏற்படக்கூடிய செலவுகளை ஈடுகட்ட இவ்வரி அறிமுகப்படுத்தப்பட்டது என்று என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது. அல்லது பி.பி.ஐ., வாலட்டில் இருந்து பணம் செலுத்துவதற்கு எந்த வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.