சென்னை ஆவடி - ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு பேருந்து சேவை தொடக்கம்
By: vaithegi Sat, 03 Dec 2022 9:15:28 PM
சென்னை : தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென் மாநிலங்கள் அனைத்திற்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆகையால் புறநகர் பகுதிகளான மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூவிருந்தவல்லி போன்ற இடங்களிலிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டியவர்கள், கோயம்பேடு சென்று பின்னர் அங்கிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை உணர்ந்த அரசு, புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திரமாநிலம் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
எனவே அதன்படி ஆவடி பணிமனையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புதிதாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிலையில் புதிதாக இயக்கப்படும் பேருந்துகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் அந்த பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார். அப்போது பேருந்து ஓட்டுநர்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என கூறிய அமைச்சர், இதனை அடுத்து அவர்களுக்கு கை கடிகாரங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.