சென்னை தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடல்
By: Monisha Sat, 10 Oct 2020 09:21:38 AM
கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப்பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக்கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அந்த ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு, சுத்திகரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தப்படுத்துவதற்காக 10-ந் தேதி (இன்று) முழுவதும் தலைமைச் செயலகம் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமையும் (நாளை) வழக்கம் போல் மூடப்படும்.