அதிக கன்டெய்னர்களை கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் நிறுவனம் சாதனை
By: Monisha Thu, 10 Dec 2020 12:57:15 PM
சென்னை துறைமுகத்தில் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் என்ற நிறுவனம் நிகழ்த்திய கன்டெய்னர்களை கையாளும் சாதனை குறித்து சென்னை துறைமுக கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
‘எம்.வி., ஏ.பி.எல். இங்கிலாந்து’ என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்தின் இரண்டாவது முனையத்துக்கு வந்தது. இங்கு சரக்குகளை கையாளும் ‘சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்’ என்ற நிறுவனம் கடந்த 4-ந் தேதி அன்று 8 ஆயிரத்து 397 கன்டெய்னர்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இவற்றில் 4 ஆயிரத்து 276 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 121 கன்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பல் கடந்த 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பு ‘எச்.எஸ். எவரெஸ்ட்’ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி அன்று 7 ஆயிரத்து 209 கன்டெய்னர்களை கையாண்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்காக ‘சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்’ நிறுவனத்தையும், துறைமுக அதிகாரிகளையும் சென்னை துறைமுக கழக தலைவர் பி.ரவீந்திரன் பாராட்டினார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.