இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியீடு
By: vaithegi Tue, 08 Nov 2022 4:29:49 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிற 9ம் தேதி முதல் 11ம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதனால் இன்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று முதல் 12.11.2022 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.