சென்னை காவல்துறையின் புதிய அறிவிப்பு; புகார்களை வாட்ஸ் அப் காணொலியில் தெரிவிக்கலாம்
By: Nagaraj Fri, 03 July 2020 10:17:53 AM
கொரோனோ தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் பேரிடர் காலத்தில் மக்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளைக்
காவல் ஆணையாளரை நேரடியாகச் சந்தித்துத் தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை
பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் காணொளி
மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று
நாட்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்துப்
பயனடையலாம்.
அதன்படி, இன்று (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம்
12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட வாட்ஸ் அப் எண்ணில் காணொளி மூலம்
காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்துப் பயனடையும்படி சென்னை பெருநகர
காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.