காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
By: vaithegi Thu, 04 May 2023 4:42:54 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் இந்தத் திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.
காலை சிற்றுண்டி திட்டம் படிப்படியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் , முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் , 2023-2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்வது பற்றி சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள், சமூக நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.