மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மீண்டும் முதலமைச்சர் ஆலோசனை
By: Monisha Fri, 29 May 2020 5:12:36 PM
தமிழகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
தற்போது நடைமுறையில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாளில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளைக் கொண்ட சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை முதலமைச்சர் கேட்க உள்ளார். நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஊரடங்கு குறித்து தகவல் தெரியவரும்.