பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மருத்துவர் குழுவினர்களுடன் முதல்வர் ஆலோசனை
By: Monisha Tue, 26 May 2020 3:26:49 PM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது நீடிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கை தொடர்வது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவர் குழுவினர்களுடன் இன்று காலை ஆலோசனை செய்தார்
அப்போது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்தும், பள்ளிகள் மீண்டும் திறப்பு குறித்தும், அவர் மருத்துவர் குழுவிடம் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் குறைவான கொரோனா பாதிப்பே இருப்பதால் சென்னை தவிர மற்ற பகுதிகளில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.