அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
By: Nagaraj Wed, 29 July 2020 12:29:15 PM
இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை... தமிழகத்தில் 7-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடனும், நாளை மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேநேரம், சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும், மற்ற மாவட்டங்களில் பல மடங்கு அதிகரித்து வருவது ஊரடங்கை நீட்டிக்கும் அழுத்தத்தை அரசுக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து, நாளை ஜூலை 30-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன்
ஆலோசிக்கிறார். மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பின் ஊடரங்கு
நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வு குறித்து முதல்வரோ, அரசோ அறிவிப்பது
நடைமுறையாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு நீட்டிப்புக்கான அறிவிப்பு
நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.
மருத்துவ நிபுணர்களை பொறுத்தவரை
பொதுப் போக்குவரத்தை தற்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று
அறிவுறுத்தியுள்ளனர். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற
பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் என்பதும் அவர்களது பரிந்துரையாக உள்ளது.
இதன்படி, தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், வரும்
ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு கட்டாயம் இருக்கும் எனவும்
அரசு தரப்பில் கூறப்படுகிறது.