முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்!
By: Monisha Wed, 21 Oct 2020 09:17:12 AM
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்த நிலையில், அவரது தாயார் மறைவால் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது, மீண்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். அந்த வகையில், நாளை (வியாழக்கிழமை) காலை 8.45 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படுகிறார். திருச்சி விமான நிலையம் சென்றவுடன், அங்கிருந்து காரில் விராலிமலைக்கு செல்கிறார்.
சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, ஐ.டி.சி. நிறுவனம் ரூ.700 கோடி செலவில் அங்கு உணவுப்பொருள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையை எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
மேலும், விராலிமலையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை அவர் திறந்துவைக்கிறார். விராலிமலையில்தான் ஜல்லிக்கட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்பு, தமிழக மக்களின் 100 ஆண்டு கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிடுகிறார்.
பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு இதயநோய் சிகிச்சைக்கான 'கேத்லாப்' வசதியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவர் திறந்துவைக்கிறார். இந்த மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற ஆய்வையும் அவர் நடத்துகிறார்.