மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
By: Monisha Tue, 26 May 2020 10:19:51 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஓன்று. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது.
இக்குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு குறித்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.