முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி..
By: Monisha Thu, 14 July 2022 7:36:02 PM
தமிழ்நாடு: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துமனைக்கு சென்ற நிலையில் அவரை கொரோனா சிகிச்சை கண்காணிப்புக்காக அனுமதித்துள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை கண்காணிப்புகளுக்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.