குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
By: vaithegi Sun, 09 July 2023 2:33:50 PM
சென்னை: ஆளுநர் மீது புகார் தெரிவித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் .... தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. முதலமைச்சர் தொடங்கி, சபாநாயகர் அப்பாவு வரை, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து அவருடன் ஆலோசனை நடத்தி, செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் என்று தெரிகிறது.
இதேபோன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதனை அடுத்து இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.