புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
By: Monisha Wed, 03 June 2020 12:05:31 PM
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருவாய்த் துறை சார்பில் ரூ.8 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் மற்றும் ஜமுனாமத்தூரில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், வட்டாட்சியர் குடியிருப்புகள் மற்றும் சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சொந்தமாக புதிய மாவட்ட அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதய குமார், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர்கள் அதுல்யமிஸ்ரா, ஷம்பு கல்லோலிகர், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.