காணொலி காட்சி வாயிலாக இன்று கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
By: Nagaraj Wed, 13 May 2020 09:02:43 AM
இன்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஆலோசனை... கொரோனா நிலை, ஊரடங்கு ஆகியவை குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 8 ஆயிரத்து 718 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.