முதலமைச்சர் பழனிசாமி இன்று மருத்துவக்குழுவுடன் ஆலோசனை
By: Nagaraj Wed, 28 Oct 2020 2:01:56 PM
இன்று ஆலோசனை... முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு அக்.,31ந் தேதியுடன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கை நீட்டிப்பதும், புதிய
தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளதாக
தெரிகிறது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் தற்போது குறைந்து வருகிறது இதனால் பல
தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில்
முக்கியமாக, தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி
வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாலை 3.30
மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.