குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர் ... முதல்வர் ஸ்டாலின்
By: vaithegi Thu, 14 Sept 2023 1:27:48 PM
சென்னை: குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை பற்றிய குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெறவுள்ளனர். மகளிர் நலத் திட்டங்களில் புது அத்தியாயமான இந்த திட்டம் குறித்தும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதில் நமது அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தியும் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய 'தி இந்து' நாளேட்டில்...என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட ஆட்சியின் சிற்பியான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்