ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
By: Nagaraj Mon, 15 Aug 2022 9:25:01 PM
சென்னை: ஆளுநர் மாளிகை விருந்தில் பங்கேற்பு... 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின். அதன்பின் சுதந்திர தின விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்படும். ஆளுநர் மூலம் அளிக்கப்படும் இந்த நிகழ்விற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட , சட்டபையில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் கடந்த குடியரசுத் தினத்தின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவினர் இதில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த குடியரசுத் தின தேநீர் விருந்தை ஆளும் திமுக புறக்கணித்தது. விசிக,
சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணித்தன. ஆளுநர் ரவி
நீட் தேர்வு மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை என்று கோபத்தால் ஆளும் திமுக
மற்றும் கூட்டணி கட்சிகள் இதை புறக்கணித்தன. மாறாக அதிமுக, பாஜக தலைவர்கள்
நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது இந்த சம்பவம் பெரிய பரபரப்பை
ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது 76வது சுதந்திர தினத்தை
முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர்
விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட
ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல்
கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை சென்ற
முதல்வர் ஆளுநர் ரவி வரவேற்றார். இவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து
வந்தனர்.
அதேபோல் அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன்,
மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில்
கலந்து கொண்டனர். ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற பல்வேறு மசோதாக்கள்
நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி கொடுக்கும் தேநீர்
விருந்தில் பங்கேற்க திமுக அரசு முடிவு செய்தது பெரிய மாற்றமாக
பார்க்கப்படுகிறது. ஆக்கபூர்வமான அரசியலாக இது பார்க்கப்படுகிறது.