புயலால் சேதமான பகுதிகளை முதல்மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் பார்வையிடுகிறார்!
By: Monisha Fri, 05 June 2020 1:12:50 PM
அரபிக்கடலில் கடலில் உருவான நிசர்கா புயல் நேற்று முன்தினம் சுமார் 110 கி.மீ. வேகத்தில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலால் ராய்காட் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன.
நிசர்கா புயல் மற்றும் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78191 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும் புயல், மழை தொடர்பான விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டபகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தில் சேத பகுதிகளை முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். மேலும் அங்குள்ள பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களை ஆய்வு செய்த பின்னர், மாவட்ட நிர்வாகிகளுடன் அலிபாக்கில் ஆலோசனை நடத்த உள்ளார்.