மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
By: vaithegi Thu, 16 Feb 2023 12:45:20 PM
சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2வது நாளாக ஆய்வு ..... ‘கள ஆய்வில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனி விமான மூலம் சேலத்திற்கு வந்தார். அப்போது ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து காலையில் விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், மாலையில் சட்டம் ஒழுங்கு பற்றி 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து இன்று 2 வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சேலம் , நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்தி, மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோன்று 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். இந்த 4 மாவட்டங்களில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; அந்த திட்டங்கள் அனைதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளதா? நலத்திட்ட உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டு இருக்கிறதா? என அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.
மேலும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை உள்ளிட்டவை பயனாளிகளை முறையாக சென்று சேர்ந்திருக்கிறதா? என்பது பற்றியும் , வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் எந்த அளவில் நடைபெற்று கொண்டு வருகிறது என்பது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டு அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது