அவசர பயன்பாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி
By: Karunakaran Mon, 24 Aug 2020 09:25:19 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் பல நாடுகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளன. ஆனால் அவை இன்னும் இறுதிக்கட்ட சோதனையிலே உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இதில் கடந்த மாதம் 22-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியது. உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்த இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தாலும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அவசர பயன்பாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்து உள்ளது. குறைவான காலகட்டத்தில் கொரோனாவினால் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் தடுப்பூசி மேலாண்மை சட்டத்தின்படி, கடுமையான பொது சுகாதார அவசரநிலை ஏற்படும் போது, மருத்துவம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணியாளர்கள், எல்லை அதிகாரிகள் போன்ற பிரிவினரை பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகளில் இருக்கும் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.