கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த சீனா ஒப்புதல்
By: Monisha Mon, 24 Aug 2020 09:18:25 AM
அபாயத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. அந்த வகையில் கொரோனா முதன் முதலில் உருவான சீனாவிலும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இதில் கடந்த மாதம் 22-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியது.
உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்த இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. எனினும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் காணப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அவசர பயன்பாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்து உள்ளது. குறைவான காலகட்டத்தில் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சீனாவின் தடுப்பூசி மேலாண்மை சட்டத்தின்படி, கடுமையான பொது சுகாதார அவசரநிலை ஏற்படும் போது, மருத்துவம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணியாளர்கள், எல்லை அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினரை பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகளில் இருக்கும் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.