சீனாவில் கொலை வழக்கில் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்தவர் விடுதலை
By: Karunakaran Fri, 07 Aug 2020 12:03:03 PM
சீனாவில் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருதி 1995-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஏற்கனவே அவர் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அவரது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவர் 27 ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். ஆனால் உண்மையில் போலீசாரின் சித்ரவதையால் 2 சிறுவர்களையும் தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தபோது, அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அது நடந்த குற்றத்துடன் பொருந்திவரவில்லை என வாதிடப்பட்டது.
இந்நிலையில் அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை என ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனால் அவர் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஜாங் யுகுவானுக்கு 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் அவரது மனைவி ஜாங் யுகுவான் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டதில் இருந்து வெளியே வர தன்னால் ஆன சட்ட உதவிகளை செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனது முன்னாள் கணவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருப்பது கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தவறாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததற்காக ஜாங் யுகுவான் இழப்பீடு பெற முடியும் என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.