அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல்
By: Karunakaran Thu, 27 Aug 2020 5:23:19 PM
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை என பல மோதல்கள் நிலவி வருகின்றன. கொரோனா வைரஸ் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் தீரா பகையை உருவாக்கி உள்ளது.
தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு உள்ளது. இந்நிலையில், சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. சீனா ஏவுகணைகளை ஏவியுள்ளது தென்சீனக் கடலில் உள்ள நாடுகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. இது மீடியம்-ரேஞ்ச் அணுஆயுத ஏவுகணை ஆகும். சீனாவின் வடக்கு பகுதியில் போஹாய் வளைகுடாவுக்கும் மஞ்சள் கடலுக்கும் இடையில் உள்ள தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவம் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.