மர்ம விதை பார்சல்களை அனுப்புகிறது சீனா; எச்சரிக்கை விடுத்த வேளாண் துணை அமைச்சகம்
By: Nagaraj Tue, 11 Aug 2020 1:04:48 PM
மத்திய வேளாண் துறை எச்சரிக்கை... சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் மர்ம விதை பார்சல்கள் உயிரி ஆயுதங்களாக இருக்கலாம். அதை யாரும் நிலத்தில் பயிரிட வேண்டாம். பெற்றதும் அழித்துவிடுங்கள் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கெனவே, வேலிகாத்தான் என்று அழைக்கப்படும் வேலிக்கருவை, பூண்டு செடி என்று அழைக்கப்படும் பார்த்தீனியம், நீர் ஆமணக்கு எனப்படும் ஐப்போமியா செடி ஆகியவை தமிழகத்துக்குள் ஊடுருவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் மண் வளமும், நீர் வளமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அழிக்க அழிக்க முளைத்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உயிரி ஆயுதங்களாக மர்ம விதை பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான விதை
பார்சல்கள் அமெரிக்காவில் பெறப்பட்டன. அந்த விதைகளைப் பார்த்ததும்
அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, ‘மக்கள் யாரும் இதை நிலத்தில் விதைக்க
வேண்டாம்.
இவை ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகளாகக்கூட இருக்கலாம்.
உயிரி ஆயுதமாக அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்’ என்று எச்சரிக்கை
செய்தது.
வேளாண்துறை அதிகாரிகள் இந்த மர்மமான விதைகளைத் தேடித் தேடி
சேகரித்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைத் தொடர்ந்து கனடா,
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த
மர்மமான விதைப் பார்சல்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டன. தொடர்ந்து தற்போது
இந்தியாவிலும் இந்த வகை விதைப் பார்சல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விதைகள்
சீனாவிலிருந்து அடையாளம் தெரியாத இடத்திலிருந்து பலருக்கும்
அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விதைகள்
குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும்
எச்சரிக்கையை விடுத்துள்ளது. “இந்த வகை விதைகள் புற்றுநோயைப் பரப்பும்
உயிரி ஆயுதங்களாகக் கூட இருக்கலாம். இவற்றை விவசாய நிலத்தில் விதைப்பதன்
மூலம் பல்லுயிர்த்தன்மை சிதையும். சுற்றுச்சூழலுக்கும், சூழலியல்
மண்டலத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில்
மாநில அரசுகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்று
எச்சரித்துள்ளது.
உலக நாடுகளுடனான மோதல் போக்கை அதிகரித்துள்ளது
சீனா. ஏற்கெனவே இந்தியாவுடன் கால்வன் பள்ளத்தாக்கில் கைகலப்பில் ஈடுபட்டது.
தென்சீனக் கடலில் வியட்னாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் உரிமைப்
போரில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப்
போர் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் அடையாளம் தெரியாத
பகுதியிலிருந்து உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன மர்மமான விதை
பார்சல்கள்.
இதன் மூலம் சீனா உயிரியல் ஆயுத போரில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.