ஆறு செயற்கை கோள்களுடன் சீனா அனுப்பிய ராக்கெட் தோல்வியை தழுவியது
By: Nagaraj Fri, 10 July 2020 8:59:37 PM
சீனாவால் 6 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுமார் 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் சீன நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணியளவில் Kuaizhou-11 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
குறித்த ராக்கெட் சீனாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியுகுவான் செய்மதி ஏவுதள மையத்திலிருந்து (Jiuquan Satellite Launch Center) ஏவப்பட்ட நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா, தனது விண்வெளித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில்
குறைவான செலவுடைய திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய
செயற்றிறன்கொண்டதாக இந்த ராக்கெட்டை உருவாக்கியிருந்தது.
இதனை,
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டிருந்த
போதும் பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவும் முயற்சி தடைப்பட்டது.
இந்நிலையில், நீண்ட தாமதத்தின் பின்னர் ஏவப்பட்ட இந்த ராக்கெட்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ள நிலையில் விண்ணில்
வெடித்துச் சிதறியதா அல்லது தரையில் வீழ்ந்ததா என்பது தொடர்பான தகவல்
வெளியாகவில்லை.
இந்த ராக்கெட் சீனாவின் ஏரோஸ்பேஸ் சயன்ஸ் (China
Aerospace Science) மற்றும் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின் (Industry
Corporation (CASIC)) துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் ரெக்னோலொஜி கார்ப்பரேஷன்
(ExPace Technology Corporation) ஆகியன இணைந்து உருவாக்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.