வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்தை தொடங்கிய சீனா
By: Monisha Fri, 14 Aug 2020 07:41:09 AM
உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்ட சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது
அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், "ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்களின் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவை, 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன" என தெரிவித்தார்.