செவ்வாய் கிரகத்தை ஆராய தியான்வென்-1 விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
By: Karunakaran Thu, 23 July 2020 5:58:57 PM
செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தியா சந்திராயன் விண்கலத்தை ஏவியபோது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கலம் கால் பதிப்பதற்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பானில் இருந்து விண்கலத்தை கடந்த 20-ந்தேதி அனுப்பியது. தற்போது, சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை இன்று ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டான லாங் மார்ச் 5 என்ற ராக்கெட் மூலம் ஹைனன் தீவிலிருந்து இன்று தியான்வென்-1 என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் 36 நிமிட பயணத்திற்குப் பின் புவி-செவ்வாய் மாற்று சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் கருவிகளை இந்த விண்கலம் கொண்டுள்ளது, 5.5 கோடி கிலோ மீட்டரை 7 மாதம் பயணித்து பிப் 2021-ல் செவ்வாய் கிரகத்தை இந்த விண்கலம் சென்றடையும். 2011-ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து சீனா செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியபோது அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.