ஹாங்காங்கை ஒடுக்க புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் சீனா
By: Monisha Sat, 23 May 2020 4:59:06 PM
ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது.
ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதுபற்றி சீன நாடாளுமன்ற கமிட்டியின் துணை தலைவர் வாங் சென் கூறுகையில், “ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு புதிய சட்ட கட்டமைப்பையும் அமலாக்க நெறிமுறையையும் நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது” என கூறினார்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது ‘ஒரு நாடு 2 அமைப்புகள்’ நடைமுறையை அழிக்கும் முயற்சி என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதற்கிடையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.